Tuesday, December 7, 2010

அன்பே

இதயத்தை திருடும் உன்
இயல்பான சிரிப்பு
மறக்க நினைத்தாலும் மரித்துவிடுகிறேன்

தேவதையா நீ மோகினியா
இரவு தூக்கத்தில்
தினம் என்னை இம்சிக்கிறாய்

பிரிவா பரிவா
எதைஅடி நீ சொல்கிறாய்
புரியா கணிதமாய் உன் கண்கள்

நொடிககளும் நிமிடங்களுமாய்
கடந்த என் பகல் பொழுது
இரவில் மட்டும் யுகமாய் தொடர்கிறது

வாழ்வின் கடைசி நொடியாய்
இன்றே வாழ்ந்திட மனம் துடிக்கிறது

இரவின் எச்சங்களாய் தொடர்ந்து
இம்சிக்கும் நட்சத்திரங்கள் உனை
பார்த்ததும் கண்சிமிட்டி கரைகிறதே

Saturday, December 4, 2010

என் தேடல்கள்

மழை விட்ட மரங்களில்
முளைக்கும் சிறு நீர் துளிகளாய்
தொலைத்த நினைவுகளோடு
தனிமையில் ஓர் பயணம்

யாருக்கும் சொந்தமின்றி
காற்றில் ஒரு கானம்
ஏனோ என்னை தழுவுகையில்
கண்ணில் சிறு ஈரம்

காரணங்கள் தெரியாத காரியங்கள்
விடை தெரியாத சில விடியல்கள்
தெரிந்தும் புரியாமல் சில வேளைகள்
புரிந்தும் தெரியாமலும் சில வேளைகள்

நினைவுகளும் தூரமாகி போன வேளை
நிமிடங்கள் மட்டும் சொந்தமகுமோ?
நிஜங்களும் விலகி போன வேளை
நிழல்கள் மட்டும் தொடருமோ?

விடை தெரியாத இரவுகளும்
விடிய மறுக்கும் பகல்களும்
நீண்ட நெடிய பாதைகளும்
கண நேரமும் சுமையாகி போனது

தேடல் என்பது முடிவுறா பயணம்
நிஜங்கள் வேண்டாம் என்றும் -
அதன் நினைவுகள் போதும்
தொடரும் என் தேடல்கள்

முடிவு

முத்தங்களின் ஈரம் காயவில்லை இன்னும்
பேசிய வார்த்தைகள் கரையவில்லை இன்னும்
அணைப்பின் பிடி தளரவில்லை இன்னும்

எனக்காய் உன்னிடம் ஒரு சுமையும்
உனக்காய் என்னிடம் ஒரு இடமும்
நிரப்பபடாமல் இன்னும்

சொல்லபடாத வார்த்தைகளுடன்
எழுதப்படாத வாக்கியங்களுடன்
முற்று பெறாத ஓர் கவிதை

நமக்காய் நமக்கான காதலை
சுகமாய் தொடர்ந்த நம் பயணம்
இதோ ஜனிக்கிறது அதன் மரணம்

Monday, September 27, 2010

எச்சரிக்கை


எச்சரிக்கை

எச்சரிக்கை என்று எழுதவும்

உன் கண்களுக்கு நடுவில்

இதயங்கள் மோதிக்கொள்ளும்

விபத்து பகுதி அது

கனவு


நீ சிரிக்க நான் தவிக்க

நீ தவிக்க நான் சிரிக்க

இனிதாய் முடிந்தது

இன்றைய கனவு

ஏக்கம்


ஏக்கம்

அவசரமாய் எனை அணைத்து
அதிசயமாய் இதழ் பதித்து
நீ என்னை துரத்துகையில்
என்னில் தெரிந்தது
ஒரு குழந்தையின் ஏக்கம்

நினைவிருக்கிறதா?



கடற்கரை மணலின்
நம் காலடி சுவடுகளை
அலை வந்து அழித்தது
நினைவிருக்கிறதா?

உறங்காத இரவுகளில்
நிமிடங்கள் நாட்கள் கடந்தும்
இறவாத குறுந்தகவல்கள்
நினைவிருக்கிறதா?

விண்மீன்கள் எண்ணிக்கொண்டே
முற்றத்தில் நிலா ரசித்து
நான் எழுதிய கவிதைகள்
நினைவிருக்கிறதா?

குடையில்லா மழை காலத்தில்
அரசமர நிழலில்
விரல் பிடித்து ஒதுங்கிய நாட்களை
நினைவிருக்கிறதா?

எங்கோ நீ சென்றாலும் உன் வாசம் பிடித்து
உன் அருகில் நான் கடக்கும் வேளை
எனை பார்த்தது நீ உதிர்க்கும் புன்னகை
நினைவிருக்கிறதா?

சனிக்கிழமை அனுமார் கோவிலில்
பிரகார சுற்றில் சுகமாய் இடித்து
உனை நான் கடந்து சென்றது
நினைவிருக்கிறதா?

வேதனைகள் உனை தின்ன
என் சட்டையில் முகம் புதைத்து
நீ அழுத நாட்களை
நினைவிருக்கிறதா?

நம் காதலில் எச்சமாய்
மிஞ்சிய உன் நினைவுகளை
எண்ணி வாழும் எனை
நினைவிருக்கிறதா?